காதலியின் குழந்தையைக் கொன்ற காதலன்!
சிங்கப்பூரில் காதலியின் 9 மாதக் குழந்தையைக் கொலை செய்த காதலனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதனுடன் 29 வயது முகமது அலிஃப் முகமது யூசோஃப்புக்கு (Mohamed Aliff Mohamed Yusoff) 15 பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த கொலை கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் திகதி நடந்தது. காதலி நடியா அப்துல் ஜலிலின் (Nadiah Abdul Jalil) குழந்தையை அன்றிரவு தன் வீட்டுக்கு அழைத்துச்செல்வதாக அலிஃப் கூறியிருந்தார்.
அவர் குழந்தையை வேனில் அழைத்துச் சென்றார். குழந்தையின் தலையை வேனின் தரைமீது மோதியதில் ஏற்பட்ட காயங்களால் குழந்தை உயிரழந்ததாக அரசாங்கத் தரப்பு கூறியிருந்தது.
எனினும் குழந்தையின் மரணம் ஒரு விபத்து என்று அலிஃப் கூறியதுடன், ஒரு கையில் பொருள்களையும் இன்னொரு கையில் குழந்தையையும் ஏந்தியவாறு வேனின் கதவை மூடியதாகவும் அவர் கூறியுள்ளார்.
கையில் வைத்திருந்த குழந்தை திடீரென்று நகர்ந்ததில் அது வேன்மீது மோதிப் பின்னர் தரையில் கீழே விழுந்தது என்றும் அலிஃப் கூறினார்.
அரசாங்கத் தரப்பின் வாதம் குழந்தையின் பிரேதப் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்ட தகவலுடன் ஒத்திருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
அலிஃப் கூறிய தகவலில் முரண்பாடுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் சந்தேக நபருக்கு
மரண தண்டனையோ அல்லது பிரம்படிகளுடன் கூடிய ஆயுள் தண்டனையோ விதிக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றனர்.