14 வயது சிறுவன் என பொய் சொல்லி பிரித்தானியாவுக்குள் நுழைந்த நபரால் பரபரப்பு!
தன்னை 14 வயது சிறுவன் என பொய் சொல்லி பிரித்தானியாவுக்குள் நுழைந்த புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் பிரித்தானியர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.
ஆப்கன் நாட்டவரான Lawangeen Abdulrahimzai (21) என்பவருக்கும் பிரித்தானியரான Tom Roberts (21) என்பவருக்கும் இடையில் நடந்த வாய்த்தகராறு முற்றி, Lawangeen கத்தியால் Tomஐக் குத்த சில விநாடிகளில் அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில், குற்றவாளியான Lawangeenஐக் குறித்த அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த Lawangeen, தன்னை ஒரு 14 வயது சிறுவன் என்று பொய் சொல்லி, தான் தாலிபான்களுக்கு தப்பி வந்ததாகக் கூறி பிரித்தானியாவில் புகலிடம் கோரியவர் ஆவார்.
ஆனால், அவருக்கு உண்மையில் 21 வயது என்பது தற்போது தெரியவந்துள்ளது.அத்துடன், இந்த Lawangeen, செர்பியாவில் இரண்டுபேரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு தப்பியோடிவந்தவர் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவலும் தற்போது கிடைத்துள்ளது.
இரண்டு கொலைகளைச் செய்துவிட்டுத் தலைமறைவான Lawangeenக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தன்னை ஒரு சிறுவன் என பொய் சொல்லி பிரித்தானியாவுக்குள் நுழைந்ததுடன், மேலும் ஒருவரைக் கொலை செய்துள்ளார்.
ஏற்கனவே அவருக்கு தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்து ஒரு தாய் போல அவரை பார்த்துக்கொண்ட பெண்மணி, Lawangeenஇடம் கத்தி இருப்பதாக ஆறு முறை பொலிஸாரை எச்சரித்திருக்கிறார்.
Tom கொல்லப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பும் Lawangeenஇடம் கத்தி இருப்பதாக சிலர் பொலிஸாரை எச்சரித்தும் அவர்கள் சரியான நடவடிக்கை எடுக்காததால், இப்படிப்பட்ட ஒரு கொலைக்குற்றவாளியை அதிகாரிகள் எப்படி பிரித்தானியாவுக்குள் நடமாடவிட்டார்கள் என்பது தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.