இஸ்ரேலில் மீண்டும் நடைமுறைக்கு வந்த விதிமுறை!
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், இஸ்ரேலில் மீண்டும் முக கவசம் அணிவது தொடர்பான விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இஸ்ரேல் நாட்டில் கொரோனா பாதிப்பு வெகுவாகக் குறைந்து வந்ததையடுத்து, அங்கு அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன.
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. மேலும் பொது இடங்களில் உள்ள உள்அரங்கங்களில், மக்கள் முக கவசம் அணிய தேவையில்லை என கடந்த 15ம் தேதி சுகாதாரத்துறை தெரிவித்தது. இதனால் பொதுமக்கள் உற்சாகமடைந்தனர்.
இந்நிலையில், கடந்த 4 தினங்களாக இஸ்ரேலில் புதிய கொரோனா பாதிப்பு 100-ஐ தாண்டியது. நேற்று 227 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
எனவே, வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், மீண்டும் முக கவசம் தொடர்பான விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதன்படி பொதுமக்கள் இனி பொது இடங்களில் உள்ள உள்அரங்கங்களுக்கு சென்றால் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதன்முதலில் காணப்பட்ட கொரோனா வைரசின் டெல்டா மாறுபாடு காரணமாக, இஸ்ரேலில் பாதிப்புகள் அதிகரித்திருக்கலாம் என தொற்றுநோய் பணிக்குழு தலைவர் நாச்மேன் ஆஷ் கூறினார்.