மொத்தம் 80 பேர்... பல்பொருள் அங்காடியை சூறையிட்டு தப்பிய கும்பல்
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றை 80 பேர்கள் கொண்ட கும்பல் சூறையாடிவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடை ஊழியர்களை தாக்கிவிட்டு, அந்த அங்காடியில் உள்ள பொருட்களை மொத்தமாக சூறையாடிவிட்டு அந்த கும்பல் மாயமாகியுள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது மூவர் சிக்கியுள்ளதாகவும், எஞ்சியவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான பகுதியில் அமைந்துள்ள குறித்த பல்பொருள் அங்காடியில் சனிக்கிழமை இரவு குறித்த சூறையாடல் சம்பவம் நடந்துள்ளது.
கடையின் இரு ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளதுடன், அதில் ஒருவர் மீது pepper spray வீசப்பட்டுள்ளது. இது திட்டமிடப்பட்ட சம்பவமாகவே பொலிசார் கருதுகின்றனர்.
சுமார் 25 கார்களில் வந்த அந்த கும்பல் வாகன நெரிசலை ஏற்படுத்திவிட்டு, கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
50 முதல் 80 பேர்கள் கொண்ட அந்த கும்பல், மொத்தமும் மாஸ்க் அணிந்திருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
கொள்ளைபோன பொருட்களின் மதிப்பு தொடர்பில் ஆய்வு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.