கொரோனா வெறும் புரளி... ஒன்ராறியோ முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்
ஒன்ராறியோ முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் நீதிமன்ற விசாரணை துவங்கியுள்ளது.
ஒன்ராறியோவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர் 37 வயதான Chris Sky Saccoccia.
மாஸ்க் அணிவதை கடுமையாக எதிர்த்த இவர், ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு எதிராகவும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்தார்.
மட்டுமின்றி பிரீமியர் டக் ஃபோர்டு மீது கொலை மிரட்டல் விடுத்ததுடன், கனேடிய முதல்வர்கள் அனைவரையும் மே 12ம் திகதிக்குள் கொன்று விடுவதாககவும் எச்சரித்திருந்தார்.
இந்த நிலையில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட ஒரு வாரத்திற்கு பிறகு ரொறன்ரோ பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் யார்க் பிராந்தியத்தில் Saccoccia-வைக் கண்டுபிடிக்கச் சென்றார்.
ஆனால் அவர் பொலிஸ் கான்ஸ்டபிள் கண் முன்னே அங்கிருந்து வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றார். தொடர்ந்து மே 20ம் திகதி ரொறன்ரோ பொலிசாரிடம் Saccoccia சரணடைந்தார்.
அவர் மீது கொலை மிரட்டல் விடுத்தல், பொலிஸ் அதிகாரியை கொல்ல முயன்றது, அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டது.
இந்த நிலையில் நிபந்தனைகளுடன் Saccoccia பிணையில் விடுவிக்கப்பட்டார். மேலும் ஜூலை 8ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகவும் அறிவுறுத்தப்பட்டார்.
பிணை நிபந்தனைகளின் படி பிரீமியர் டக் ஃபோர்டு வசிக்கும் பகுதியில் 500 மீற்றருக்குள் இனி Saccoccia நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, வாகனத்தில் செல்லவோ, ஆயுதங்களை கைவசம் வைத்திருக்கவோ கூடாது.