2 ஆண்டுகளுக்கு பின் பெத்லகேமில் குவியும் சுற்றுலா பயணிகள்
பெத்லகேமில் கிறிஸ்துமஸ் சுற்றுலா பயணிகள் குவியத்தொடங்கி உள்ளனர்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று காரணமாக பாலஸ்தீனத்தில் உள்ள ஏசுநாதரின் பிறப்பிடமான பெத்லகேம் நகரில் கடந்த 2 ஆண்டுகளாக சுற்றுலாப்பயணிகள் செல்லவில்லை.
இந்நிலையில் தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு விட்டநிலையில் இந்த ஆண்டு ஏசுநாதர் பிறப்பின் பண்டிகையான கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அங்கு உலகமெங்கும் இருந்து சுற்றுலாப்பயணிகள் குவியத்தொடங்கி உள்ளனர்.
இதுபற்றி அந்த நகர ஓட்டல் அதிபர்கள் சங்கத்தலைவர் எலியாஸ் அர்ஜா கூறுகையில், "கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் பொதுமுடக்கங்களும், பயணக்கட்டுப்பாடுகளும் அமலில் இருந்தன.
தற்போது அந்த நிலை இல்லை. இதன் காரணமாக இங்குள்ள புனித தலங்களுக்கு வர வேண்டும் என்ற ஆவல் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த ஆண்டு புனித பூமியைப் பார்ப்பதற்கு கிறிஸ்தவ மத சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலை மோதும் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும் உலகமெங்கும் புதிய ஆண்டு எங்கள் தொழில் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறோம்" என அவர் தெரிவித்தார்.