கொரோனா அச்சுறுத்தல்: சீன தலைநகரில் போக்குவரத்து கட்டுப்பாடு அமல்!
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக சீனாவின் தலைநகரமான பீஜிங்கில் புதிய போக்குவரத்து கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை உலகுக்கு பரப்பிய சீன நாடு, இப்போது அதில் இருந்து மீள முடியாமல் இடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கிறது.
இதேவேளை சீனாவின் பொருளாதார தலைநகரான ஷாங்காய் Covid19 பரவல் தடுக்க பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் முடங்கியுள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ஷாங்காய் நகரின் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கிறார்கள்.
மக்கள் போதுமான உணவைப் பெறவே போராடுகிற கடினமான தருணம் வந்துள்ளது. ஆனாலும் அங்கு நேற்று முன்தினம் (04-05-2022) உள்ளூர் அளவில் 4,390 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலைமை தலைநகர் பீஜிங்கிற்கும் வந்துவிடக்கூடாது என்று சீன அரசு முன்கூட்டியே முன்னெச்சரிக்கையுடன் செயற்பட்டு வருகின்றது.
அங்கு கடந்த மாதம் 22-ம் தகதியில் இருந்து இதுவரை 450-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பீஜிங் நகரில் தொற்று பரவல் தடுக்க புதிய போக்குவரத்து கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
நகரில் பொது போக்குவரத்து சாதனங்களில் பயணிக்கவும், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பொது இடங்களுக்கு வரவும் கொரோனா பாதிப்பு இல்லை என காட்டுகிற, 7 நாட்களுக்குள் பெற்ற நியூக்ளிக் பரிசோதனை அறிக்கையை பொதுமக்கள் தங்களுடன் வைத்திருக்க வேண்டும்.
இந்த நகரில் பல திரையரங்குகள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி கூடங்கள் மூடப்பட்டுள்ளன.
ஓட்டலுக்குள் சாப்பிடவும் மக்களுக்கு அனுமதி இல்லை.
மே தின விடுமுறை முடிந்தும் பள்ளிகள் திறக்கப்படாமல் மூடியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.