564 ரூபாய்க்கு ஆச பட்டு 30 கிலோ பழத்தை சாப்பிட்ட நண்பர்கள்; நேர்ந்த சோகம்
தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில், வாங் என்ற நபர் அவரது மூன்று நண்பர்களுடன் வணிக பயணத்திற்காக குன்மிங் விமான நிலையத்திற்கு சென்றுள்ளனர். அதற்கு முன்னதாக ஒரு கடையில் 50 யுவான் ( இந்திய மதிப்பில் ரூ. 564) மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள ஆரஞ்சு பழ பெட்டியை வாங்கியுள்ளனர்.
விமான நிலையத்துக்கு சென்று விமானத்தில் ஏற அவர்கள் தயாரானபோது ஆரஞ்சுக்கான லக்கேஜ் கட்டணமாக ஒவ்வொரு கிலோ ஆரஞ்சு பழத்திற்கும் 10 யுவான் என மொத்தம் 300 யுவான் (ரூ. 3384) செலுத்த வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஆரஞ்சு பழங்கள் வாங்கிய விலையை விட லக்கேஜ் கட்டணம் அதிகமாக இருந்ததால் அவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த தயாராகவும் இல்லை.
இதனால் விமான நிலையத்திலேயே அந்த 30 கிலோ பழங்களை சாப்பிட்டு விடலாம் என முடிவு செய்தனர். அதன்படி நான்கு பேரும் ஒன்றாக அமர்ந்து 30 கிலோ ஆரஞ்சு பழங்களையும் சாப்பிட்டும் முடித்துள்ளனர். இதுகுறித்து குளோபல் டைம்ஸிடம் பேட்டியளித்த வாங், “நாங்கள் விமான நிலையத்திலேயே அனைத்து பழங்களையும் சாப்பிட்டோம், இதற்கு சுமார் 20-30 நிமிடங்கள் தேவைப்பட்டது” என கூறியுள்ளார்.
இது ஒரு வித்தியாசமான நிகழ்வாக அமைந்தாலும் கூட, அந்த நான்கு பேரும் ஒரே நேரத்தில் சிட்ரஸ் அமிலம் நிறைந்த ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டதால் வாய் புண்ணால் அவதிப்பட்டதுடன் தற்போது நான்கு பேரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இனிமேல் ஆரஞ்சு பழமே சாப்பிடக்கூடாது என முடிவு செய்துள்ளனராம்.