மீண்டும் சர்வதேச பயணம் தொடங்கும்போது வித்தியாசமான கனடாவைப் பார்க்கலாமாம்
கனடாவில் சர்வதேச பயணம் தொடங்கும்போது, எல்லைகள் மற்றும் விமான நிலையங்கள் முற்றிலும் வித்தியாசமாக இருக்குமாம். அதாவது, கனடா மீண்டும் சர்வதேச பயணத்தைத் தொடங்கும்போது, தானியங்கி கருவிகளுடன் எளிமையாக மக்கள் பயன்படுத்தும் வகையில் விமான நிலையங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும்.
எல்லை பாதுகாப்பை நவநாகரீகமாக்கி, விமான நிலையங்களில் சுகாதார கட்டுப்பாடுகளை மேம்படுத்தி, சர்வதேச பயணத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல, கனடா பல நூறு மில்லியன் டொலர்களை செலவிட திட்டமிட்டுள்ளது.
சமீபத்தைய பட்ஜெட்டில் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் உள் கட்டமைப்புக்காக 82.5 மில்லியன் டொலர்களையும், கனேடிய விமான பயண பாதுகாப்பு அதிகாரிகளுக்காக கிருமிநீக்க கருவிகளை வாங்குவதற்கு 6.7 மில்லியன் டொலர்களையும் கனடா அரசு ஒதுக்கியுள்ளது. அத்துடன், கனடாவின் எல்லை பாதுகாப்பை நவநாகரீகமாக்க 656.1 மில்லியன் டொலர்களையும் அரசு ஒதுக்கியுள்ளது.
மேலும், பயணிகளின் அடையாளம் குறித்த விவரங்கள், போர்டிங் பாஸ், தடுப்பூசி போட்டது குறித்த விவரங்கள், கொரோனாவிலிருந்து விடுபட்டவர்களா என்ற விவரங்கள் ஆகியவற்றை டிஜிட்டல் வடிவில் கொண்டுவரும் திட்டம் ஒன்றும் பரிசீலனையில் உள்ளது.
என்றாலும், என்ன டிஜிட்டல் மயமானாலும், நீங்கள் உங்கள் பாஸ்போர்ட்டை கையில் வைத்துக்கொண்டிருக்கத்தான் வேண்டும் என்று கூறும் மூத்த கனடா எல்லை பாதுகாப்பு அதிகாரி ஒருவர், உங்கள் பாஸ்போர்ட்டுக்கு மாற்றாக ஒரு விடயத்தைக் கொண்டு வருவது குறித்து நாங்கள் பேசவில்லை, உங்கள் ஆவணங்களை எத்தனை முறை பயன்படுத்துகிறீர்கள் என்பதை குறைக்க முயற்சிக்கிறோம் என்கிறார்.