கொரோனா விதிமுறைகளை மீறி பிறந்தநாளை கொண்டாடிய அதிபருக்கு நேர்ந்த நிலை!
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் பொது இடத்தில் மக்கள் ஒன்று கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த நாட்டின் அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ் இந்த கொரோனா விதிமுறைகளை மீறி தனது மனைவியின் பிறந்தநாளை கூட்டத்தைக் கூட்டி கொண்டாடியதும், அப்போது அதிபர் உட்பட யாரும் முக கவசம் அணியாமல் இருந்ததும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ந் தேதி நடந்த பிறந்தநாள் கொண்டாட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் அண்மையில் சமூக ஊடகங்களில் பரவி சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து கொரோனா விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ் மீது குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
இத்தகைய குற்றத்துக்காக அதிபர் சிறைக்கு செல்லும் அபாயம் இல்லை என்றாலும் வருகிற நவம்பர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த நன்மதிப்பை குறைத்துள்ளது.