போர்நிறுத்த பேச்சுவார்த்தைக்கு அழைத்த ட்ரம்ப் ; ஈரான் கொடுத்த பதிலடி
ஈரானுடன் போர்நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், அவரது அழைப்பை ஈரான் நிராகரித்துள்ளது.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிலைப்பாட்டில் ஈரான் இல்லை என அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்ப்பின் அழைப்பு தொடர்பாக ஈரானின் தேசிய பாதுகாப்புத் துறை செயலாளர் மொஹ்சென் ரெஸாயி தனது எக்ஸ் தள பதிவில், அமெரிக்க ஜனாதிபதியின் முரண்பாடான கருத்துக்களால் யாரும் திசைதிரும்ப வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான சூழ்நிலை மாறிவிட்டதாகவும், ஈரான் முன்வைக்கும் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதாக உறுதியளிக்கும் வரை பேச்சுவார்த்தை நடத்தப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு இது மிகவும் ஆரம்பகட்டம் என பல நாட்களாக கூறிவந்த ட்ரம்ப், நேற்று வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
ஈரான் விரைவாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புவதாகவும், அதில் அமெரிக்கா ஈடுபட வேண்டுமா என்பதை தானே தீர்மானிப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, போர்நிறுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகையை விலக்கிக் கொள்வதற்கு ஈரான் சில நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போரினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை ஈரான் முன்வைத்துள்ள போதிலும், அவற்றை ஏற்க அமெரிக்கா மறுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.