காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர புதிய அமைதி ஒப்பந்தம் ; ட்ரம்ப் முக்கிய அறிவிப்பு
காஸா பகுதியில் செயற்படும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பும் ஏனைய ஆயுதக் குழுக்களும் முழுமையாக நிராயுதபாணியாக்கப்படுவதற்கான "சமாதான சபை" (Board of Peace) உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், இஸ்ரேல்–காஸா போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் முன்மொழியப்பட்டுள்ள "ட்ரம்ப்பின் 20 அம்சத் திட்டத்தை" நடைமுறைப்படுத்துவதில் இந்த உடன்பாடு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் பல கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், ஹமாஸ் மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்களின் நிராயுதபாணியாக்கல் முன்னேறியபோது, இஸ்ரேலியப் படைகள் படிப்படியாக காஸா பகுதியிலிருந்து வெளியேறும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், சர்வதேச ஸ்திரப்படுத்தல் படையினரும் புதிதாக அமைக்கப்படவுள்ள பாலஸ்தீன பொலிஸ் படையினரும் இணைந்து காஸாவின் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சிகளில் இடைத்தரகர்களாகச் செயற்பட்ட எகிப்து, கட்டார் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளுக்கு ட்ரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய பாலஸ்தீன அரசாங்கத்தின் கீழ் காஸா நிர்வகிக்கப்படுவதற்கான அடித்தளமாக இந்த உடன்பாடு அமையும் என்றும், அந்த அரசாங்கம் "Board of Peace" அமைப்புடன் இணைந்து பாலஸ்தீன மக்களின் நலனுக்காகச் செயற்படுவதோடு, இஸ்ரேலின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கெய்ரோவில் இடைத்தரகர்களுக்கும் ஹமாஸ் தலைவர்களுக்கும் இடையில் அமெரிக்காவின் தலையீட்டுடன் முன்னெடுக்கப்பட்டுள்ள காஸா அமைதித் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், முன்வைக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் போதுமானதாக இல்லை என இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை, வியாழக்கிழமை இடம்பெற்ற இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் இரு சிறுவர்கள் உட்பட குறைந்தது ஆறு பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக காஸா மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.