உக்ரைனுக்கு டோமாஹாக் ஏவுகணைகளை வழங்க ட்ரம்ப் மறுப்பு
உக்ரைனுக்கு தேவைப்படும் டோமாஹாக் ஏவுகணைகளை வழங்கத் தயாராக இல்லை என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி வெள்ளை மாளிகையில் நேற்று, ட்ரம்ப்பைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போதே ரஷ்யாவுக்குள் நீண்ட தூரம் ஊடுருவித் தாக்கக்கூடிய, டோமாஹாக் ஏவுகணைகளை, அவர் அமெரிக்காவிடம் கோரியுள்ளார்.
எனினும், அமெரிக்கா தற்போதைக்கு ஒரு தீவிரத்தை விரும்பவில்லை என்பதால், அந்த விவகாரம் குறித்து, தாம் கருத்துக்களை வெளியிட விரும்பவில்லை என்று, சந்திப்பின் பின் செய்தியாளர்களிடம், செலன்ஸ்கி கூறியுள்ளார்.
இதேவேளை, சந்திப்பைத் தொடர்ந்து, ட்ரம்ப், தமது சமூக ஊடகப் பதிவில், கியேவ் மற்றும் மொஸ்கோ தரப்புகள், போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாக, ட்ரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் பேசி விரைவில் ஹங்கேரியில் அவரைச் சந்திக்க ஒப்புக்கொண்ட ஒரு நாளுக்குப் பின்னர் ட்ரம்ப்-செலென்ஸ்கி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.