கனடா குறித்து மீண்டும் சர்ச்சை கருத்து வெளியிட்ட டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், கனடா தொடர்பில் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
கனடாவை “51வது மாநிலம்” என குறிப்பிட்ட தனது சர்ச்சைக்குரிய பேச்சை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.
வாஷிங்டன் அருகே குவாண்டிகோவில் திடீரென கூட்டப்பட்ட உயர்மட்ட இராணுவ அதிகாரிகளிடம் அவர் உரையாற்றியபோது, தனது கோல்டன் டோம் ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
அப்போது, “சில வாரங்களுக்கு முன்பு கனடா எங்களைத் தொடர்பு கொண்டு இந்த ஏவுகணை பாதுகாப்பு அமைப்பில் சேர விருப்பம் தெரிவித்தது.
அதற்கு நான், ‘அமெரிக்காவில் இணையுங்கள், அப்போதுதான் இலவசமாகக் கிடைக்கும்’ என்று பதில் அளித்தேன்” என டிரம்ப் தெரிவித்தார். மேலும், “கனடா தற்போது சிரமங்களைச் சந்தித்து வருகிறது.
ஏனெனில், நாம் விதித்துள்ள சுங்க வரிகள் காரணமாக வணிகங்கள் அமெரிக்காவிற்கு மாறிவருகின்றன” என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களில் கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் டிரம்ப் பலமுறை தொலைபேசியில் பேசியிருந்தாலும், அந்த உரையாடல்களின் விவரங்கள் குறித்து கார்னி அமைதியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் ஓர் மாநிலமாக கனடாவை இணைத்துக் கொள்வது குறித்து டிரம்ப் பல்வேறு சந்தர்ப்பங்களில் கருத்து வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.