ரஷ்ய தலைநகர் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தல் இறுதி நாளான இன்று (20), உக்ரைன், மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளை நோக்கி மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலை நடத்தியதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாஸ்கோ மேயர் செர்கெய் சோபியானின் கூற்றுப்படி, தலைநகரை நோக்கி வந்த நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டுள்ளன.
இந்தத் தாக்குதலில் மாஸ்கோ பிராந்தியத்தில் இருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலின் போது மாஸ்கோவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் சேதமடைந்ததாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள கெர்சன் பகுதியில் தேர்தல் அதிகாரி ஒருவரும் உட்பட மேலும் இருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதல் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக ரஷ்ய தரப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதேவேளை, 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீதான முழுமையான போர் தொடங்கிய பின்னர் நடைபெறும் முதல் ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும்.
மூன்று நாட்களாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் ஞாயிற்றுக்கிழமை மதியம் வரை வாக்குப்பதிவு 50 சதவீதத்தை கடந்ததாக ரஷ்ய தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்தல் முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை இரவு அல்லது திங்கட்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.