முடிவில்லாமல் 50 ஆவது நாளாக தொடரும் உக்ரைன் - ரஷ்யா போர்; நிறுத்தப்போவது யார்?
கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்ய அதிபர் புதின் தொடங்கிய நிலையில் 50 நாளை கடந்துள்ளபோதிலும் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இந்த போர் காரணமாக உக்ரைன் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகள் நோக்கி வெளியேற தொடங்கினர். உக்ரைனின் அனைத்து நகரங்களிலும் ரஷ்யா தாக்குதல் நடத்தியது.
முதலில் ராணுவ நிலைகளை மட்டுமே குறி வைத்த ரஷ்யா, நாள் செல்லச் செல்ல குடியிருப்புகளிலும் தாக்குதலை விரிவுபடுத்தியது. இந்த நிலையில் போருக்கு இடையேயும் இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகளும் தொடர்ந்தன.
எனினும் , மேற்குலகின் உறுதிமொழிகளை நம்பி, நேட்டோவில் இணையும் முடிவை கை விடப்போவதில்லை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) உறுதி காட்டினார் . இதனால் உக்ரைன் உருக்குலையத் தொடங்கியது . புச்சா நகர் வீதிகளில் மனித சடலங்கள் சிதறிக் கிடக்கும் காட்சிகள் உலகை உலுக்கியது.
பொருளாதாரத் தடைகள், ஐநா, சர்வதேச நீதிமன்றம் என எதனையும் பொருட்படுத்தாமல் தாக்குதலைத் தீவிரப்படுத்திய ரஷ்யா, 40 நாட்களுக்குப் பின் போரின் வியூகத்தை மாற்றியது. அதாவது மற்ற நகரங்களை விட்டு விட்டு மரியுபோலை மட்டும் குறி வைத்தது ரஷ்யா. அதனை கைப்பற்றி விட்டால் டான்பாஸ் பகுதியுடன் கிரீமியாவையும் இணைத்து விடலாம் என்று தாக்குதலில் தீவிரம் காட்டியது.
அதன் பயனாக ஒரு வழியாக நேற்று அந்த நகரில் உக்ரைன் வீரர்கள் சரணடைந்துள்ளனர். அதேசமயம் ரஷ்ய - உக்ரைன் போர் 50 நாளை கடந்துள்ள நிலையில் இதுவரை உக்ரைன் இழந்தது ஏராளம். அத்துடன் ரஷ்யாவுக்கும் குறிப்பிடத்தக்க வெற்றி என்று சொல்வதற்கில்லை.
இந்த இரு நாடுகளுக்குமிடையினான போர் பெரும்பாலான நாடுகளை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளி விட்டுள்ளது. எனினும் அது குறித்து கவலைப்படாமல் மேற்குலக நாடுகள் இன்னும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றும் வேலையைத் தொடர்கின்றதனால் அப்பாவி உக்ரைன் மக்கள்தான் பெரும் அழிவைச் சந்தித்து வருகின்றனர்.
அதிபர்கள் புதின் (Putin) மற்றும் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) இருவர் மட்டுமே இந்த போரை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதுதான் உண்மை நிலை. ஆனால், மேற்குலகம் சொல்வதை மட்டுமே கேட்கிறார் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) . யார் சொல்வதையும் கேட்க மாட்டேன் என்கிறார் புதின் (Putin).
இவர்களில் விட்டுக் கொடுக்கப் போவது யார்? என்ற கேண்வி எழுந்துள்ள நிலையில், இருவரின் ஒருவரும் விட்டுக்கொடுக்கவில்லையென்றால் 100 நாள் ஆனாலும் போர் முடிவுக்கு வராது என்பது மட்டும் உறுதி அவதானிகள் கூறுகின்றனர்.