அமெரிக்காவிடம் உக்ரைன் ஜனாதிபதி மனைவி விடுத்த வேண்டுகோள்!
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் (Volodymyr Zelenskyy) மனைவி ஒலனா ஜெலன்ஸ்கா (Olena Zelenska) நேற்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் எம்.பிக்களிடையே உரையாற்றினர்.
அப்போது, அவர் பேசியதாவது,
எதிரிகளை எதிர்த்து போராடவும் லட்சக்கணக்கான உக்ரைன் மக்களை பாதுகாக்கவும் அமெரிக்கா எங்களுக்கு ஏற்கனவே நிறைய உதவி செய்துள்ளது.
இந்த போரில் அமெரிக்கா எங்களுடன் நிற்பதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம். ரஷ்யா கொல்லும் போது, அமெரிக்கா காப்பாற்றுகிறது.
அதற்காக உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். துரதிர்ஷ்டவசமாக போர் முடிவுக்கு வரவில்லை. பயங்கரவாதம் தொடர்கிறது.
இந்த போரில் கொல்லப்பட்டவர்கள் சார்பாகவும், கை கால்களை இழந்தவர்கள் சார்பாகவும், இன்னும் உயிருடன் இருப்பவர்கள் சார்பாகவும், போர் நடைபெறும் முன்களப் பகுதியில் இருந்து தங்கள் குடும்பத்தினர் திரும்ப வருவார்கள் என்ற நம்பிக்கையில் காத்திருப்பவர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன்.
நான் கேட்க விரும்பாத ஒன்றைக் கேட்கிறேன், ஆயுதங்களைக் கேட்கிறேன். ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை கேட்கிறேன்.
என் மகன் தனது பள்ளிக்குத் திரும்ப முடியுமா என்பது, உக்ரைனில் உள்ள லட்சக்கணக்கான தாய்மார்களைப் போன்று எனக்கும் தெரியாது.
எனது மகள் கல்வியாண்டின் தொடக்கத்தில் பல்கலைக்கழகத்திற்குச் சென்று சாதாரண மாணவ பருவ வாழ்க்கையை அனுபவிக்க முடியுமா? என்பதற்கும் என்னிடம் பதில் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.