ரஷ்யாவுக்கு 11 வருஷத்துக்கு பின்னர் ஐநா வைத்த செக்!
ஐக்கிய நாடுகள் அவை மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷ்யாவை தற்காலிகமாக நீக்கியுள்ள நிலையில், அதனை உக்ரைன் வரவேற்பதக தெரிவித்து உள்ளது. ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் தேசம் விருப்பம் தெரிவித்து வந்த நிலையில் அதனை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது.
இதன் தொடர்ச்சியாக உக்ரைன் நாட்டில் சிறப்பு ராணுவ ஆப்பரேஷனை நடத்த அனுமதி கோரி ரஷ்ய நாடாளுமன்றத்தில் அதிபர் புதின் கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு நாடாளுமன்றமும் அனுமதி கொடுத்ததனையடுத்து கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார் விளாடிமிர் புதின்.
இதனை அடுத்து உக்ரைனில் ரஷ்ய ராணுவத்திற்கும் உக்ரைன் பாதுகாப்பு படைக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருகிறது. இதன்காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த போர் காரணமாக இதுவரையில் 30 லட்சம் மக்கள் அண்டை தேசங்களில் தஞ்சமடைந்துள்ளதாக உக்ரைன் கூறிவருகிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் கீவ், புச்சா ஆகிய பகுதிகளில் ரஷ்யா நடத்திவரும் தாக்குதலை உலக நாடுகள் கடுமையாக கண்டித்துவந்தன.
இதனை அடுத்து ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவிற்கு எதிராக தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது . இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்த நிலையில் 93 நாடுகள் இத்தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நிலையில் 24 நாடுகள் எதிராக வாக்களித்ததை அடுத்து ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேறியது.
அதேவேளை இந்தியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா உள்ளிட்ட 58 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன. முன்னதாக கடந்த 2011 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடான லிபியாவை ஐநா பாதுகாப்பு கவுன்சில் சஸ்பெண்ட் செய்திருந்தது . அதன்பிறகு இப்போதுதான் ஐநா கவுன்சிலில் இருந்து , ரஷ்யாவை தற்காலிகமாக நீக்கியுள்ளது.
அதேபோல, உக்ரைனில் நடந்து வரும் மனித உரிமை மீறல்களுக்கு ரஷ்யாவே பொறுப்பு என உலக நாடுகள் தெரிவித்துள்ளதாக ஐநாவுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்டு கூறியுள்ளார்.
நேற்று ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் வெளியேறியது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை எதிர்த்து இதுவரையில் 8 தீர்மானங்கள் ரஷ்யாவிற்கு எதிராக ஐநாவில் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
அதேவேளை இதில் அனைத்து தீர்மானங்களிலும் வாக்களிக்காமல் இந்தியா வெளியேறியது குறிப்பிடத்தக்கது.