இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கவலை!
இலங்கையில் காணாமல்போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றுக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள், மற்றும் நாட்டில் அண்மைய பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்சலெட் அம்மையார் (Michelle Bachelet)கவலையை வெளியிட்டுள்ளார்.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 47 வது அமர்வின் ஆரம்ப நிகழ்வின் போது ஐ நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்சலெட் இதனை வெளிப்படுத்தினார். இலங்கையில், முஸ்லிம்களை குறிவைப்பதாக கருதப்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் தமிழர்கள் மீதான துன்புறுத்தல் தொடர்பில் தாம் கவலைப்படுவதாகவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.
போரில் இறந்தவர்களை நினைவுக்கூரும் நிகழ்வுகளின் போது இடம்பெறும் உரிமை மீறல்களைவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகத்திற்கான அண்மைக்கால நியமனங்கள், கடந்த கால குற்றங்கள் தொடர்பான விசாரணைகளில், பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கையை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றதாகவும் அவர் தனது ஆரம்ப உரையில் கூறினார்.
300 க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் குழுக்கள் மற்றும் தனியாட்களை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாகக் கூ றி பட்டியலிடுதல் அல்லது தடைசெய்தல் உள்ளிட்ட பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள், நல்லிணக்கத்தை முன்னெடுக்காது என்றும் பேச்லெட் அம்மையார் கூறியுள்ளார்.
மேலும் இலங்கையில் பொலிஸ் காவலில் தொடர்ச்சியான இறப்புகள் தொடர்பில் உடனடி மற்றும் சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.