பிரித்தானியாவிற்காக சேவையாற்றுவது மிகப்பெரிய பாக்கியம் ரிஷி சுனக்
பிரித்தானியாவிற்காக சேவையாற்றுவதனை மிகப் பெரிய பாக்கியமாக கருதுவதாக அந்நாட்டின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து வரலாற்றில் முதன்முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனக் அந்நாட்டின் பிரதமர் ஆக சற்று முன் போட்டியின்றி தேர்வானார்.
அவர் விரைவில் இங்கிலாந்தின் மிக உயரிய பதவியில் பொறுப்பேற்கவுள்ளார். இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கிற்கு, ஆளும் கன்சர்வேடிவ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
லண்டனில் உள்ள கன்சர்வேடிவ் கட்சியின் தலைமையகத்தில் ரிஷிசுனக் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றதற்காகவும், கன்சர்வேடிவ் மற்றும் யூனியனிஸ்ட் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் நான் பணிவுடன், பெருமையும் அடைகிறேன்.
நான் விரும்பும் கட்சிக்கும், என் நாட்டிற்கும் சேவையாற்றுவது எனது வாழ்வின் மிகப்பெரிய பாக்கியம்.
இங்கிலாந்து மக்களுக்காக நான் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் உழைப்பேன். நான் நேர்மையுடனும் பணிவுடனும் உங்களுக்கு சேவை செய்வேன் என்று உறுதியளிக்கிறேன்.
நாட்டிற்காக லிஸ் டிரஸ்ஸின் அர்ப்பணிப்பான பொது சேவைக்காக நான் அவருக்கு மரியாதை செலுத்த விரும்புகிறேன்இங்கிலாந்து ஒரு சிறந்த நாடு, ஆனால் நாம் ஆழமான பொருளாதார சவாலை எதிர்கொள்கிறோம்.
நமக்கு இப்போது ஸ்திரத்தன்மையும் ஒற்றுமையும் தேவை. நம் கட்சியையும் நாட்டையும் ஒன்றாகக் கொண்டு வருவதை நான் எனது அதிகபட்ச முன்னுரிமையாகக் கருதுகிறேன்.
அதுதான் சவால்களை சமாளித்து, நம் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி. இவ்வாறு அவர் கூறினார்.