இஸ்ரேல்-ஈரான் மோதலில் அமெரிக்காவின் தலையீடு ; ஈரானிய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தற்போதைய மோதலில் அமெரிக்காவின் தலையீடு மிகவும் ஆபத்தானதாக அமையும் என ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி எச்சரித்துள்ளார்.
இதனிடையே, இஸ்தான்புல்லில் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்காக, அப்பாஸ் அரக்சியைச் சந்தித்துள்ள துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன், 'மத்திய கிழக்கில் அமைதிக்கு இஸ்ரேல் மிகப்பெரிய தடையாக உள்ளது' என கூறுகிறார்.
இந்தநிலையில், கடந்த 13 ஆம் திகதி மோதல் தொடங்கியதிலிருந்து சுமார் 430 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஈரானிய சுகாதார அமைச்சு கூறுகிறது.
அதேநேரம், மோதல் தொடங்கியதிலிருந்து, இஸ்ரேலில் 25 பேர் கொல்லப்பட்டதாகவும் 2,517 பேர் காயமடைந்ததாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
இதனிடையே, இன்று காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக எட்டு ஈரானிய ஆளில்லா விமானங்கள், இஸ்ரேலிய வான்வெளியில் பறந்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் கூறுகின்றன.
அத்துடன், இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களில் ஹமாஸ் ஒருங்கிணைப்பாளர் சயீத் இசாடி மற்றும் குட்ஸ் படைத் தளபதி பெஹ்னம் ஷஹ்ரியாரி ஆகிய இரண்டு ஈரானிய தளபதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒரு வாரங்களுக்குள் ஏதேனுமொரு இடத்தில் ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முடியும் என, தான் தற்போது நம்புவதாக அமெரிக்க தேசிய புலனாய்வு பணிப்பாளர் துல்சி கப்பார்ட் தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குகிறது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என, தாம் முன்னதாக கூறியமை தவறானது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்த நிலையில், இன்றைய தினம் அவரது கருத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.