கனடா–அமெரிக்க எல்லையில் போதைப்பொருள்–துப்பாக்கி கடத்தல் சதி
கனடா–அமெரிக்க எல்லைப் பகுதியில் செயல்பட்டதாகக் கூறப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதாக, கனடா மற்றும் அமெரிக்காவின் இரட்டை குடியுரிமை கொண்ட அக்வேசாஸ்னே பகுதியைச் சேர்ந்த மூவர் மீது அமெரிக்க அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த வியாழக்கிழமை இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.
கனடா, அமெரிக்கா மற்றும் அக்வேசாஸ்னே பழங்குடியினர் காவல்துறையினர் இணைந்து மேற்கொண்ட விசாரணையில், கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு மெத்தாம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தியதாகக் கூறப்படும் வலையமைப்பு அடையாளம் காணப்பட்டது.

மேலும், இந்தக் குழு போதைப்பொருளுக்கு மாற்றாக பல துப்பாக்கிகளைப் பெற திட்டமிட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
47 வயது மற்றும் 38 வயதுடைய இருவர், போதைப்பொருளை விநியோகிக்கும் சதியில் ஈடுபட்டதாகவும், விநியோகிக்கும் நோக்கில் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக 10 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்படலாம். 81 வயதுடைய பெண் ஒருவர், போதைப்பொருளை விநியோகிக்கும் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
அமெரிக்க துணை தலைமை அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜான் ஏ. சார்கோன் III, கனடா மற்றும் அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகளுக்கிடையேயான முன்னெப்போதும் இல்லாத ஒத்துழைப்பை பாராட்டியுள்ளார். 47 வயதுடைய சந்தேகநபர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற இருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.