அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22 ஆக உயர்வு
அமெரிக்காவின் மைனே மாகாணம் லூயிஸ்டன் நகரில் வாலிபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கி சூடு நடத்தியதில் உயிரிழந்தோர் எண்னிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
லூயிஸ்டன் நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் நுழைந்து அங்குள்ள மதுபான விடுதி, ஓட்டல், பெளலிங் விளையாட்டு மையம், வணிக வளாகத்தின் பொருட்கள் விநியோக மையம் ஆகியவற்றுக்குள் துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டுள்ளான். இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடினர்.
அலறியடித்தபடி ஓடி ஒளிந்த மக்கள்
துப்பாக்கி சூடு காரணமாக லூயிஸ்டன் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. துப்பாக்கி சூட்டில் ஏராளமானோர் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். பின்னர் துப்பாக்கி சூடு நடத்திய நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். துப்பாக்கி சூட்டில் 22 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். துப்பாக்கிச்சூடு நடந்தபோது பலர் தப்பிக்க அங்கு உள்ள கட்டிடங்களில் இருந்த அறைகளில் பதுங்கிக்கொண்ட நிலையில் சம்பவம் இடந்த்திற்கு வந்த பொலிஸார்அவர்களை ஒவ்வொருவராக பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
சந்தேகநபரின் புகைப்படத்தை வெளியிட்ட பொலிஸார்
தாக்குதல் நடத்திய நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வரும் நிலையில் சந்தேகநபரின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டனர்.
அவரது பெயர் ராபர்ட் கார்ட் என்றும், மைனேவில் உள்ள அமெரிக்க இராணுவ ரிசர்வ் பயிற்சி நிலையத்தில் துப்பாக்கி பயிற்றுவிப்பாளராக பயிற்சி பெற்றவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் அவர் மனநல மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார் என்றும் தெரிவிக்கின்றனர். அதேவேளை அவரிடம் ஆயுதம் இருப்பதால் பொதுமக்களை எச்சரிக்கையுடன் வீட்டுக்கு உள்ளேயே இருக்கும்படியும் லூயிஸ்டன் நகரில் கடைகளை மூடவும் பொலிஸார் அறிவுறுத்தினர்.
தாக்குதல் நடத்தியவரை பிடிக்க லூயிஸ்டன் நகர் முழுவதும் பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். அந்த நபர் பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனே பொலிஸாருக்கு தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. துப்பாக்கி கலாசாரத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்தாலும் இச்சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.