காசாவில் சிக்கியிருந்த அமெரிக்க இராணுவவீரரின் குடும்பம் : இரகசிய நடவடிக்கை மூலம் மீட்பு
காசாவில் சிக்கியிருந்த அமெரிக்க இராணுவவீரரின் குடும்பத்தவர்கள் இரகசிய நடவடிக்கையொன்றின் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா எகிப்து இஸ்ரேல் உட்பட பல நாடுகள் இணைந்து மேற்கொண்ட இரகசிய நடவடிக்கையொன்றின்மூலம் அமெரிக்காவின் இராணுவ வீரரின் தாயாரும் உறவினரும் மீட்கப்பட்டுள்ளனர் என அமெரிக்க அதிகாரியொருவர் அசோசியேட்டட் பிரசிடம் தெரிவித்துள்ளார்.
காசாவில் கடும் மோதல்கள் ஆரம்பித்த பின்னர் அமெரிக்கர் ஒருவரை மீட்பதற்காக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை இதுவே முதல் தடவை என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
44வயதான ஜஹ்ராஸ்கக் தனது உறவினருடன் புத்தாண்டு தினத்தன்று காசாவிலிருந்து வெளியேறியுள்ளார் என பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை குறித்த விபரங்கள் பாதுகாப்பு காரணங்களிற்காக இரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பிட்ட பெண் காசாவில் கட்டிடமொன்றில் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சிலிருந்து தப்புவதற்காக தப்பியோடியவேளை அவரது கணவர் சுடப்பட்டார் அவர் சில நாட்களின் பின்னர் உயிரிழந்தார்.
இவர்களின் மகன் அமெரிக்கஇராணுவத்தில் பணியாற்றுகின்றார்.
இஸ்ரேலிய இராணுவத்தினரும் இஸ்ரேலிய அதிகாரிகளும் இணைந்து அமெரிக்க இராணுவீரரின் தாயாரை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் - தரை நடவடிக்கைகளில் அமெரிக்க பங்கேற்கவில்லை.