ஐ.நா தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய அமெரிக்கா
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் முடிவுக்கு வராத நிலையில், காசாவில் கடும் பஞ்சநிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் காசாவில் உடனடி நிபந்தனையற்ற நிரந்தரயுத்த நிறுத்தத்தை கோரும் ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.
இது ஐந்தாவது தடவை
14 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.
அதேவேளை இஸ்ரேலை பாதுகாப்பதற்காக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளமை இது ஐந்தாவது தடவையாகும்.
யுத்தநிறுத்த கோரிக்கைக்கும் ஹமாஸ் தன்னிடமுள்ள பணயக்கைதிகளை விடுதலை செய்வதற்கும் நேரடி தொடர்பில்லை என தெரிவித்து கடந்த நவம்பரில் ஜோபைடன் நிர்வாகமும் யுத்தநிறுத்த தீர்மானத்திற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தது.
காசாவின் நிலைமையை பேரழிவு என வர்ணித்து காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் உடனடியாக சென்றடைவதற்காக அனைத்து கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்கவேண்டும் ,என கோரும் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டனும் பிரான்சும் வாக்களித்திருந்தன.
இஸ்ரேலை இலக்குவைத்து பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை நிராகரித்தன் மூலம் அமெரிக்கா ஒரு வலுவான செய்தியை தெரிவித்துள்ளது என அந்த நாட்டின் இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையில் ஒரு தவறான ஒரு சமாந்திரத்தை வரையும் இஸ்ரேல் தன்னை தானே பாதுகாப்பதற்காக உள்ள உரிமையை புறக்கணிக்கும் எந்த தீர்வையும் அமெரிக்கா ஏற்றுக்கொள்ளாது என தெரிவித்துள்ள அவர் , ஐநாவில் தொடர்ந்தும் அமெரிக்கா இஸ்ரேலிற்கு ஆதரவாகயிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.