பைசரை தொடர்ந்து களமிறங்கும் ஆக்ஸ்போர்டு; 2 ஆவது தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்த இங்கிலாந்து
புதிய வகை கொரோனா வேகமாக பரவும் சூழலில் பைசர் தடுப்பூசியை தொடர்ந்து ஆக்ஸ்போர்டின் தடுப்பூசிக்கும் இங்கிலாந்து அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் 53 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அரசாங்கம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் படி கடந்த 24 மணி நேரத்தில் 53,135 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இங்கிலாந்தில் 71,100 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.
அத்துடன் லண்டனில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவு மொத்தமாக முடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், மருத்துவமனைகளுக்கு வெளியே கூடாரங்கள் அமைத்து நோயாளிகளை பராமரிக்க வேண்டிய மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
பொதுவாக போர் காலகட்டத்தில் இதுபோன்ற கூடாரங்கள் அமைத்தே நோயாளிகளை பரமாரிக்கும் நிலை உருவாகும்.தற்போது லண்டனிலும் அதே நிலை உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் தரப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பைசர் தடுப்பூசியை தொடர்ந்து ஆக்ஸ்போர்டின் தடுப்பூசிக்கும் இங்கிலாந்து அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வேகமாக பரவும் சூழலில் 2ஆவது தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. கோவிஷீல்டு எனும் பெயரில் ஆக்ஸ்போர்டு உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கு பிரிட்டன் அனுமதி அளித்துள்ளது.
இதேவேளை இந்தியாவில் ஆக்ஸ்போர்டின் கோவிஷீல்டு தடுப்பூசியை சீரம் நிறுவனம் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.