போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு ஒத்திகை பார்க்கப்பட்டதா?
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு ஒத்திகை பார்ப்பதாக தகவல் வெளியானதாக இத்தாலி ஊடகங்களில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டாலும், திடீரென முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு
88 வயதான போப் பிரான்சிஸ், மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக, ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த 14ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ததில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று அவருக்கு எடுக்கப்பட்ட புதிய CT ஸ்கேன் பரிசோதனையில், தொற்று தீவிரமாக இருப்பதாகவும், அவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் மருத்துவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், போப்பாண்டவருக்கு பாதுகாப்பு அளிக்கும் காவலர்கள், அவரது இறுதிச் சடங்குகளுக்கான ஒத்திகையில் ஈடுபட்டதாக இத்தாலி ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
எனினும் , இந்த தகவல் தவறானது என்றும், எந்த விதமான ஒத்திகையும் செய்யவில்லை என்றும் இத்தாலி பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதேசமயம் கத்தோலிக்க தேவாலயங்களில் போப் உடல்நலத்திற்காக சிறப்பு ஆராதனைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.