உக்ரைன் மீது அணு ஆயுதங்களைப் உபயோகிக்க மாட்டோம்! ரஷ்யா
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா அந்நாட்டின் மீது அணு ஆயுதங்கள் பயன்படுத்த மாட்டோம் என ரஷிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 72-வது நாளாக போரை நடத்தி வரும் நிலையில் குறித்த போரில் பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன.
அதேவேளை, உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இந்த சூழலில், உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்தக்கூடும் என்றும், அதற்கான பயிற்சியில் ரஷ்யா ஈடுபடுகிறது என்றும் தகவல்கள் வெளியாகின.
ஒரு வேளை ரஷ்யா அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால், அது மிகப்பெரிய மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மேற்கத்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், உக்ரைனில் ரஷ்யா அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அலெக்ஸி ஜைட்சேவ் தெரிவித்தார்.
ரஷ்யா உக்ரைன் மீது நடத்தப்படும் ராணுவ நடவடிக்கைக்கு இது பொருந்தாத ஒன்று என்றும் அவர் தெரிவித்தார்.