குற்றச்செயலில் ஈடுபட்டவர் என தெரிந்தும் எப்ஸ்டீனை கனடாவுக்குள் அனுமதித்தது ஏன்?
மோசமான குற்றவாளி என தெரியவந்த பிறகும் ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு கனடாவுக்குள் நுழைய அனுமதியளிக்கப்பட்டுள்ளதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், குற்றச்செயலில் ஈடுபட்டவர் என தெரிந்தும் எப்ஸ்டீனை கனடாவுக்குள் அனுமதித்தது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

வேலை தருவதாக வாக்களித்து, பருவம் எய்தாத சிறுமிகள் முதல், இளம்பெண்கள் வரை, ஏராளமானோரை சீரழித்து, அந்தப் பெண்களை தனது நண்பர்கள் பலருக்கும் விருந்தாக்கியவர் அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன்.
சமீபத்தில், அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்கள், பல்வேறு நாடுகளின் அரசியலிலும் புயலைக் கிளப்பிவருகின்றன.
அந்த ஆவணங்களில் ஒன்றில், 2014ஆம் ஆண்டு எப்ஸ்டீன் கனடாவுக்கு பயணித்த விடயம் குறித்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
2008ஆம் ஆண்டு சிறுமி ஒருத்தியை சீரழித்தது உட்பட இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் எப்ஸ்டீனுக்கு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அப்படி மோசமான குற்றச்செயலில் ஈடுபட்டு தண்டிக்கபபட்ட ஒருவர், சட்டப்படி கனடாவுக்குள் அனுமதிக்கப்படமாட்டார்.

ஆனால், 2014ஆம் ஆண்டு, எப்ஸ்டீன் கனடா வந்ததற்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஆக, இப்படி ஒரு மோசமான குற்றவாளி கனடாவுக்குள் எப்படி அனுமதிக்கப்பட்டார் என கேள்வி எழுந்துள்ளது.
கனடாவின் புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பிடம் இது குறித்து கேள்வி எழுப்பியபோது, அந்த அமைப்பு, கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சியை கைகாட்டியுள்ளது.
கனடா எல்லை பாதுகாப்பு ஏஜன்சியோ கேள்விக்கு பதிலளிக்க மறுக்கிறது.

இதற்கிடையில், அந்த காலகட்டத்தில், கனடாவின் புலம்பெயர்தல் அமைச்சராக இருந்த கிறிஸ் அலெக்சாண்டர், எப்ஸ்டீன் கனடா வந்தது குறித்து தனக்குத் தெரியாது என்றும், அப்படி அவர் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பாரானால், அது புலம்பெயர்தல் அமலாக்கத்தில் மிக சீரியஸான தவறாகும் என்றும் கூறியுள்ளார்.