மாலத்தீவில் இருந்து படைகளை வெளியேற்றுங்கள்: இந்தியாவிடம் புதிய அதிபர் வேண்டுகோள்
மாலத்தீவிலிருந்து இந்தியப் படைகள் வெளியேறவேண்டுமென அந்நாட்டின் புதிய ஜனாதிபதி முகமது முய்சு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாலத்தீவு நாட்டின் அதிபர் தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது.
இதில், அதிபராக இருந்த இப்ராகிம் முகமது சோலியும், எதிர்க்கட்சியை சேர்ந்த முகமது முய்சுவும் போட்டியிட்டனர். இதில், முகமது முய்சு வெற்றி பெற்றார்.
இதனையடுத்து மாலத்தீவின் 8வது அதிபராக முகமது முய்சு நேற்றைய தினம் (18-11-2023) பதவியேற்றார்.
முன்னதாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றால் மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை வெளியேற்றுவேன் என முகமது முய்சு வாக்குறுதி அளித்திருந்தார்.
இந்த நிலையில், தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதியாக முகமது முய்சு மாலத்தீவில் உள்ள படைகளை திரும்பப்பெறும்படி இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மாலத்தீவில் 70 இந்திய வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். இந்திய விமானப்படையின் ரேடார் மற்றும் உளவு விமானங்களும் மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்திய போர்கப்பல்கள் மாலத்தீவின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
படைகளை திரும்பப்பெறும்படி இந்தியாவிற்கு மாலத்தீவு கோரிக்கை விடுத்துள்ள நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.