நேட்டோ மாநாட்டுக்கு சென்றுள்ள ட்ரம்ப் வலியுறுத்தல்
கிரீன்லாந்து தீவானது டென்மார்க்கின் கீழ் இருக்கக் கூடாது என்றும், அது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
துருக்கி தலைநகர் அங்காராவில் நடைபெற்று வரும் நேட்டோ உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள நிலையில் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
டென்மார்க்கின் சுயாட்சி பெற்ற பிரதேசமான கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்ற ட்ரம்பின் இந்த அறிவிப்பு, நேட்டோ அமைப்பின் ஸ்தாபக நாடுகளான அமெரிக்கா மற்றும் டென்மார்க்குக்கு இடையே புதிய இராஜதந்திர பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகனுடனான சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "கிரீன்லாந்து அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்பட வேண்டும், டென்மார்க்கினால் அல்ல.
இந்த விவகாரமே நேட்டோ அமைப்புடனான எமது உறவில் விரிசலை ஏற்படுத்தியது" எனக் குறிப்பிட்டார்.
"கிரீன்லாந்தால் டென்மார்க்கிற்கு எந்த பயனும் இல்லை, அதனை மேம்படுத்த டென்மார்க் பணம் செலவிடுவதும் இல்லை. ஆனால், கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு மிக முக்கியமான ஒரு பகுதியாகும்.
தற்போது அதனைச் சுற்றி சீன மற்றும் ரஷ்ய கப்பல்கள் சூழ்ந்துள்ளன, இதனை எம்மால் அனுமதிக்க முடியாது.
ரஷ்ய அச்சுறுத்தலில் இருந்து அவர்களைப் பாதுகாக்க நாம் இவ்வளவு பணம் செலவழிக்கும் போது, அவர்கள் எமது திட்டத்துக்கு உடன்பட மறுக்கிறார்கள்" என்று சாடினார்.
எவ்வாறாயினும், கிரீன்லாந்து விவகாரம் தொடர்பாக டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அதிகாரிகளுடன் மாதாந்தம் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ரூபியோ கடந்த ஜூன் மாதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.