1,001 நாட்களின் பின் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பெண் உரிமை செயற்பாட்டாளர்
சவூதி அரேபியாவில் 2018 ஆம் ஆண்டிலிருந்து தடுத்துவைக்கப்பட்டிருந்த பெண்கள் உரிமை செயற்பாட்டாரான லோஜெய்ன் அல் ஹத்லோல் சுமார் 1,001 நாட்களின் பின்னர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
31 வயதான லோஜெய்ன் அல் ஹத்லோலுக்கு பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தின்கீழ் அந்நாட்டு நீதிமன்றம் 5 வருடங்கள் மற்றும் 8 மாத சிறைத்தண்டனை விதித்து கடந்த டிசெம்பர் மாதம் தீர்ப்பளித்திருந்தது. லோஜெய்ன் அல் ஹத்லோல் சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் செலுத்துவற்கு அனுமதிக்கப்பட வேண்டும் என போராட்டம் நடத்தியவர். 2018 மே மாதம் லோஜெய்னும் மேலும் பல பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
சவூதி அரேபியாவில் பெண்களும் வாகனம் செலுத்துவதற்கு அனுமதியளிக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புக்கு சில வாரங்களுக்கு முன் அவர் கைது இடம்பெற்றது. எனினும் , மேற்படி போராட்டத்துக்கும் அவர் தடுத்துவைக்கப்பட்டமைக்கும் தொடர்பில்லை என சவூதி அரேபிய அதிகாரிகள் கூறியிருந்தனர். சவூதி அரேபியாவின் நட்பில்லாத நாடுகளுடன் லோஜெய்ன் தொடர்புகொண்டிருந்ததாகவும், இரகசிய தகவல்களை வழங்கியதகாவும் சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசால் பின் பர்ஹான் கடந்த டிசெம்பர் முற்பகுதியில் ஏ.எவ்.பியிடம் கூறியிருந்தார்.
ஆரம்பத்தில் றியாத் குற்றவியல் நீதிமன்றத்தில் லோஜெய்ன் மீது விசாரணை நடத்தப்பட்டது. பின்னர், விசேட குற்றவியல் நீதிமன்றம் அல்லது பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் எனும் விசேட நீதிமன்றத்துக்கு கடந்த மாதம் அவர் மீதான வழக்கு மாற்றப்பட்டது. லோஜெய்னுடன் கைது செய்யப்பட்ட சிலர் முன்னர் விடுவிக்கப்பட்டபோதிலும், லோஜெய்னும் வேறு சிலரும் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர்.
எதிர்வரும் 3 வருடங்களில் அவர் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபடாவிட்டால், லோஜெய்னுக்கு விதிக்கப்பட்டுள்ள 68 மாத கால சிறை தண்டனையில், 2 வருடங்கள் மற்றும் 10 மாத சிறைத்தண்டனை (34 மாத சிறைத்தண்டனை) இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும் லோஜெய்னை விடுவிக்குமாறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியிருந்தன.
இந்நிலையில் லோஜெய்ன் 1001 நாட்களின் பின் விடுவிக்கப்பட்டுள்ளார் என அவரின் சகோதரி லீனா, நேற்றுமுன்தின் தெரிவித்துள்ளார்.