இலங்கைக்கு நிதியுதவி வழங்கவுள்ள உலக வங்கி
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் நிதியுதவி வழங்க உலக வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக 400 மில்லியன் டொலர்களை விரைவில் வழங்கவுள்ளதாக உலக வங்கியின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி சியோ கண்டா அறிவித்துள்ளார்.
மருந்து மற்றும் சுகாதார தேவைகள், சமூக பாதுகாப்பு, விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் எரிவாயு தேவைகளை பூர்த்தி செய்ய இந்த நிதி பயன்படுத்தப்படும்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியை கையாள்வதில் இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உலக வங்கி பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.