உலகின் மிக உயரமான பாலம் திறப்பு
உலகின் மிக உயரமான பாலமான சீனாவின் ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம் (Huajiang Grand Canyon Bridge), மூன்று ஆண்டுகள் கட்டுமானப் பணிகளுக்குப் பின்னர் இன்று (28) போக்குவரத்துக்காகத் திறக்கப்பட்டது.
சீனாவின் குய்ஜோ மாகாணத்தில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்தப் பாலம், ஆற்றில் இருந்து 625 மீற்றர் (2,051 அடி) அமைக்கப்பட்டுள்ளது.
உலகின் மிக உயரமான பாலம்
இது, அதே மாகாணத்தில் உள்ள 565 மீற்றர் உயரமான பீபான்ஜியாங் பாலத்தின் சாதனையை முறியடித்து, தற்போது உலகின் மிக உயரமான பாலம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
இந்தப் பாலம் திறக்கப்பட்டதன் மூலம், இரு கரைகளுக்கு இடையிலான பயண நேரம் இரண்டு மணிநேரத்தில் இருந்து வெறும் இரண்டு நிமிடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த சாதனைப் பொறியியல் கட்டமைப்பு, பிராந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.