ஐரோப்பாவுக்கு புதிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ரஷ்யா: பிரிட்டன் பகிரங்க குற்றச்சாட்டு
உக்ரைனின் சபோரிஜியா அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் செயற்பாட்டிற்கு ரஷ்ய படைகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதாக பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமானது மார்ச் மாதம் முதல் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ளது, ஆனால் இன்னும் இயங்குகிறது. இந்த நிலையில், குறித்த அணுமின் நிலையத்தை தங்களுக்கான அரணாக ரஷ்யா பயன்படுத்தி வருவதாகவும், அங்கிருந்து உக்ரைன் மீது தாக்குதலை ரஷ்ய தரப்பு முன்னெடுத்து வருவதாகவும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆனால், தற்போதைய சூழலில் குறித்த அணுமின் நிலையமானது முற்றிலும் கட்டுப்பாடற்ற சூழலில் சிக்குண்டுள்ளது என ஆய்வாளர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ரஷ்யா துருப்புகள் குறித்த ஆலையையும் அதைச் சுற்றியுள்ள பகுதியையும் ஆக்கிரமித்திருந்தாலும், தற்போது உக்ரேனிய ஊழியர்களால் இயக்கப்பட்டு வருகிறது. மட்டுமின்றி, அணுமின் நிலையத்தை தங்கள் கேடயமாக பயன்படுத்தி வருவதால் உக்ரைன் துருப்புகளால் பதில் தாக்குதல் முன்னெடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
ரஷ்ய படைகளால் தற்போது ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதனிடையே, ரஷ்யா துருப்புக்களை நிலைநிறுத்தியுள்ளதாகவும், மின் நிலையத்தின் மைதானத்தில் இராணுவ உபகரணங்களை சேமித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் முன்னர் கூறியிருந்தது.
தற்போது அந்த அணுமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளை முன்னெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், உரிய சோதனைகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் நிபுணர்கள் தரப்பு கோரிக்கை முன்வைத்துள்ளது.