கனடாவில் இளம் பொலிஸ் உத்தியோகத்தர் வாகனம் மோதியதில் பலி
கனடாவின் வடக்கு ஒன்ராறியோ பகுதியில் உள்ள ஹேர்ஸ்ட் நகரில், பணியில் ஈடுபட்டிருந்த ஒன்ராறியோ மாகாணக் காவல் துறை அதிகாரி ஒருவர் வாகனம் மோதி உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பல முக்கியப் பிரமுகர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். ஹேர்ஸ்ட் பகுதிக்கு அருகில் காவல் துறையினர் ஒரு சம்பவம் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கிருந்த 29 வயதுடைய போலீஸ் அதிகாரி தருண் பாலி மீது வாகனம் ஒன்று மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர், பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தருண் பாலி ஒன்ராறியோ மாகாணக் காவல் துறையில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார்.
அவர் மத்திய ஒன்ராறியோவின் டஃபெரின் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும், தற்காலிகப் பணிக்காக ஜேம்ஸ் பே பிரிவுக்கு அனுப்பப்பட்டிருந்த போது இந்தத் துயரம் நிகழ்ந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக 18 வயதுடைய இளைஞர் ஒருவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர் மீது முதல் நிலை கொலைக் குற்றம், ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியது மற்றும் பொலிஸாரிடம் இருந்து தப்பியோட முயன்றது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அதிகாரி தருண் பாலியின் மரணச் செய்தி கேட்டு மிகுந்த மனவருத்தம் அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.