கருப்பினத்தவரை இழிவுபடுத்திய இரு ஆசிரியர்கள் பணிநீக்கம்!
மாணவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய ஆசிரியர்களே, சமூக வலைதளங்களில் மிக மோசமான இனவாதக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அதிர்ச்சிகரமான சம்பவம் டொராண்டோவில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த இரு ஆசிரியர்களின் இழிவான செயலையடுத்து, அவர்கள் டொராண்டோ கத்தோலிக்க பாடசாலைச் சபையிலிருந்து (TCDSB) உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
நோர்த் யோர்க் பகுதியில் உள்ள ஜேம்ஸ் கார்டினல் மெக்கிகன் மேல்நிலைப் பாடசாலையிலேயே இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

மாணவர்களும் அணுகக்கூடிய ஒரு சமூக வலைதளக் குழுவில் (Instagram Chat), இந்த இரு ஆசிரியர்களும் கருப்பினத்தவர்களை மிகக் கேவலமாகச் சித்தரிக்கும் புகைப்படங்களையும், வார்த்தைகளையும் பகிர்ந்துள்ளனர்.
ஒரு ஆசிரியர் இனவாதப் படத்தைப் பகிர, அதற்கு மற்றொரு ஆசிரியர் மிக மோசமான இனவெறிச் சொல்லையும், உணவுகளை வைத்து இழிவுபடுத்தும் கிண்டல்களையும் பதிலாகப் பதிவிட்டுள்ளார்.
இவர்களின் இந்த உரையாடல்களைப் பார்த்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்து, அதனை ஆதாரத்துடன் பாடசாலை நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த ஆசிரியர்களின் செயலை விடவும் மோசமான விடயம் என்னவென்றால், பாடசாலை நிர்வாகம் இதனை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் விட முயன்றதாகக் கூறப்படுகிறது.
ஒரு கூட்டத்தில் ஆசிரியர் ஒருவர், "நடந்தது நடந்துவிட்டது, அதனை மறந்துவிட்டு முன்னோக்கிச் செல்வோம்" என மாணவர்களைச் சமாதானப்படுத்த முயன்ற ஆடியோ ஆதாரங்கள் வெளியாகிப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.