10 நாட்களில் 3 வது சோதனை; மிரட்டும் வடகொரியா
அடிக்கடி அணு ஆயுத ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்துவரும் நாடு வடகொரியா. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது.
இதனூடாக , தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது. இதற்கிடையில், இந்த ஆண்டு தொடக்கம் முதல் வடகொரியா தனது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தியுள்ளது.
தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை கடந்த 5 ஆம் திகதி வடகொரியா பரிசோதனை செய்தது. அந்த சோதனையை தொடந்து கடந்த 11 ஆம் திகதி ஹைப்பர் சோனிக் ஏவுகணையை ஏவி 2 ஆவது பரிசோதனை செய்தது.
இதையடுத்து, ஏவுகணை சோதனை நடத்தியதற்காக வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத்தடைகள் விதித்ததுடன், வடகொரியாவை சேர்ந்த 5 அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது.
இந்நிலையில், வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது. 10 நாட்களில் மேற்கொள்ளப்படும் 3-வது ஏவுகணை பரிசோதனை இதுவாகும். இன்று மொத்தம் 2 ஏவுகணைகளை வடகொரியா சோதனை செய்துள்ளது.
ரெயில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகள் கடல்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இலக்கை துல்லியமாக சென்று தாக்கி அழித்தது.
இந்நிலையில் வடகொரியா மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடைகளுக்கு பதிலடியாகவே இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.