45 வயது நபருடன் 6வயது சிறுமிக்கு திருமணம் ; வலுக்கும் கடும் கண்டனங்கள்
ஆப்கானிஸ்தானில் 45 வயது நபருக்கு, ஆறு வயது சிறுமியை மணமுடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சிக்குப் பிறகு, குழந்தை திருமணங்கள் தொடர்பான சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன.
சிவில் சட்டம்
2021ம் ஆண்டு வரை ஆண்களுக்கு 18 வயதுக்குள்ளும் , பெண்களுக்கு 16 வயதுக்குள்ளும் திருமணம் செல்லாது என சிவில் சட்டம் இருந்தது. ஆனால் தற்போது, இஸ்லாமிய சட்டத்தின் பெயரில் குறைந்தபட்ச திருமண வயதைக் கூட நிர்ணயிக்காமல் விட்டுள்ளனர்.
யுனிசெஃப் நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, ஆப்கானிஸ்தானில் 57% பெண்கள் 19 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொள்கிறார்கள். 21% பெண்கள் 15 வயதிற்குள் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இந்த நிலையில், தெற்கு ஆப்கானிஸ்தானின் மர்ஜா மாவட்டத்தில் 45 வயது நபருக்கு, 6 வயது சிறுமியை மணமுடித்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு ஏற்கனவே 2 மனைவிகள் உள்ளனர்.
இதனிடையே சிறுமியின் திருமணத்திற்காக அந்தக் குழந்தையின் தந்தைக்கும் பணம் கொடுத்து உதவியுள்ளார். அதன்பேரில், அந்தச் சிறுமியை அவரிடம் தந்தையே விற்றுள்ளார். இதையடுத்து, அந்தச் சிறுமியை அவர் கட்டாயம் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தலிபான்கள் அந்தச் சிறுமியை அங்கிருந்து அழைத்துச் சென்று பெற்றோர் வீட்டில் கொண்டுபோய் விட்டுள்ளனர். இதேவேளை குறித்த சிறுமிக்கு 9 வயதானதற்குப் பிறகு அவரை கணவர் வீட்டுக்கு அனுப்பலாம் எனத் தெரிவித்தனர்.
மேலும் சிறுமியின் திருமணத்திற்கு உடந்தையாய் இருந்த மணமகனையும், சிறுமியின் தந்தையையும் கைது செய்தனர்.
எனினும், இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் கடும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.