இந்தியாவில் பரவும் புதிய நோயால் 6,000 கால்நடைகள் உயிரிழப்பு!
ராஜஸ்தான் மாநிலத்தில் 16 மாவட்டங்களில் கால்நடைகளுக்கு தோல் கட்டி நோய் வேகமாக பரவி வருகிறது. மாட்டின் தோலில் கட்டி உருவாகி மாடுகள் இறக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன.
இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமான கால்நடைகள் கடந்த சில மாதங்களில் உயிரிழந்திருக்கின்றன. நோயை கட்டுப்படுத்த மாநில அரசு தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
அதோடு நோயை கட்டுப்படுத்த மத்திய அரசு நிதியுதவி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதிகமாக பசு கால்நடைகள் தான் உயிரிழந்து வருகின்றன. இதனால் பால் உற்பத்தி பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
ராஜஸ்தான் மட்டுமல்லாது குஜராத்திலும் இந்த நோய் 22 மாவட்டங்களில் பரவி இருக்கிறது. கடந்த சில மாதங்களில் இந்த நோயிக்கு 1800க்கும் அதிகமான பசு கால்நடைகள் குஜராத்தில் உயிரிழந்துவிட்டன. அதோடு 70 ஆயிரத்திற்கும் அதிகமான கால்நடைகள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளன.
நோய் பரவலை தாமதமாகவே தெரிந்து கொண்ட மாநில அரசு, நோயை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதுவரை 15 லட்சத்திற்கும் அதிகமான கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநில கால்நடைத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் பகுதிதான் இந்த நோயால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. தேவையான தடுப்பூசிக்கு அகமதாபாத் நிறுவனம் ஒன்றுடன் மாநில அரசு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
கட்ச் பகுதியில் மாநில முதல்வர் புபேந்தர பட்டேல் நிலைமையை நேரில் பார்வையிட்டார். இப் பகுதியில் மட்டும் 40 ஆயிரம் கால்நடைகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நோய் காரணமாக குஜராத்தில் தினமும் 50 ஆயிரம் லிட்டர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.