பாகிஸ்தானில் தொடரும் அவலம் ; 10 நாட்களில் 6 ஹிந்து சிறுமிகள் கடத்தல்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஹிந்து சிறுமியர் கடத்தப்பட்டு, கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்யப்படும் அவலம் தொடர்கிறது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து பெண்கள், குறிப்பாக கோலி, பீல், மேக்வார் போன்ற ஏழை சமூகத்தைச் சேர்ந்த சிறுமியர் அடிக்கடி காணாமல் போகின்றனர்.
இவர்கள் கடத்தப்பட்டு, கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு, பின் திருமணம் செய்து வைக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.

இந்தத் திருமணங்கள் சட்டவிரோதமானவை என சிறுபான்மையினர் நல அமைப்புகள் குரல் கொடுத்தும், இதுபோன்ற அவலங்கள் தொடர்கின்றன.
அந்த வகையில், சிந்து மாகாணத்தில் உள்ள டாண்டோ அல்லாயார் மாவட்டத்தில், 13 மற்றும் 14 வயதுடைய இரண்டு ஹிந்து சகோதரிகள் கடத்தப்பட்டனர்.
சீதா, ரூபி என்ற இந்த இரு சிறுமியரையும் கடத்தி மதம் மாற்றி திருமணம் செய்துவைக்கப்பட்டதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.
இரு சிறுமியரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, இருவரும் அழுதுகொண்டே, 'நாங்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும்' என, கெஞ்சி யும், நீதிமன்றம் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைக்காமல், பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்ப உத்தரவிட்டது. இந்தக் காட்சி சமீபத்தில் வெளியாகி, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதற்கு அடுத்த நாளே 14 வயதான, பன்சி கோலி என்ற மற்றொரு ஹிந்து சிறுமி கடத்தப்பட்டுள்ளார்.
செப்டம்பர் மாதம் தொடங்கி 10 நாட்களில் ஆறு ஹிந்து சிறுமியர் கடத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.