கனடாவில் ஆன்லைன் மூலம் போலி நாணயத்தாள்கள் விற்பனை: 6 பேர் கைது!
கனடாவின் டொராண்டோ பெரும்பாக பகுதியில் (GTA) இணையதளம் வழியாகப் போலிப் பணத்தை விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த ஆறு பேரை ஹால்டன் பிராந்தியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீது சுமார் 20-க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2025 ஆகஸ்ட் மாதம், இன்ஸ்டாகிராம் பக்கங்கள் வாயிலாகக் கனடியப் போலிப் பண விற்பனை விளம்பரப்படுத்தப்படுவதைக் காவல்துறை கண்டறிந்தது.
இது குறித்து விசாரணை நடத்த 'புராஜெக்ட் மிராஜ்' என்ற பெயரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த கும்பல் இன்ஸ்டாகிராம் வழியாக ஆன்லைன் கடைகளை நடத்தி வந்தது எனவும் போலிப் பணத்தை "திரைப்படப் படப்பிடிப்பிற்கான பணம்" (Film prop money) என்ற பெயரில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்துள்ளனர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாடிக்கையாளர்கள் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தியவுடன், இந்தப் போலித் தாள்கள் கனடா முழுவதும் கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் 31 அன்று டொராண்டோவில் உள்ள மூன்று வீடுகள் மற்றும் வாகனங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் சுமார் 60,000 டொலர் மதிப்பிலான ஆன்லைன் விற்பனை முடக்கப்பட்டுள்ளது.
மேலும், 6,500 டொலர் மதிப்புள்ள ஒரு அவுன்ஸ் தங்கக் கட்டி, 13 செல்போன்கள் மற்றும் பல மடிக்கணினிகள், போலிப் பணத்தைப் பேக்கிங் செய்யும் பொருட்கள் மற்றும் ஆன்லைன் கடைகளின் வணிக அட்டைகள் (Business Cards) என்பன மீட்கப்பட்டுள்ளன.
கனடிய டொல முதல் யூரோ வரை பல்வேறு நாடுகளின் போலிப் பணக் கட்டுகளும், போலிப் பணத்தை அச்சடிக்க உதவும் கருவிகள் மற்றும் 'ஹாலோகிராஃபிக்' பாதுகாப்புப் பட்டைகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சோதனையின் போது பெருமளவிலான போதைப்பொருட்களும் சிக்கின. இதில் 12 அவுன்ஸ் கோகோயின், 2 அவுன்ஸ் MDMA, 6 அவுன்ஸ் மெத்தாம்பேட்டமின் (Methamphetamine) மற்றும் 80 சானாக்ஸ் (Xanax) மாத்திரைகள் அடங்கும்.
இந்தச் சம்பவத்தில் டொராண்டோவைச் சேர்ந்த பின்வரும் 6 பேர் மீது மொத்தம் 23 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ரஃபி அகமது (23), ஷஃபி அகமது (24), லெவென்டே க்ளோன்சி (21), டேவிட் ஹோ (29), ஜேசன் ஹோ (31), தான் புய் (29) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கும்பல் தொடர்பாகத் கூடுதல் தகவல் தெரிந்தவர்கள் ஹால்டன் காவல்துறையின் நிதிக்குற்றப் பிரிவு அல்லது 'க்ரைம் ஸ்டாப்பர்ஸ்' அமைப்பைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.