ரயில் பாதை நடுவே சிக்கிக்கொண்ட மாணவி!
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் ரயிலில் இருந்து இறங்க முயன்ற போது கால் தவறி வீழ்ந்து ரயிலுக்கும் ரயில் பாதை (Platform) இடையே சிக்கி கொண்ட மாணவியை 2 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு ரயில்வே பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், அன்னவரம் பகுதியை சேர்ந்தவர் சசிகலா (20). இவர் விசாகப்பட்டினம் அருகே உள்ள துவ்வாடா எனும் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.
இவர் தினமும் தனது ஊரிலிருந்து ரயில் மூலமாக கல்லூரிக்கு சென்று வருகிறார். இந்நிலையில், நேற்றும் இவர் வழக்கம்போல் குண்டூர்-ராயகடா எக்ஸ்பிரஸ் ரயிலில் கல்லூரிக்கு பயணம் செய்தார்.
அப்போது துவ்வாடா ரயில் நிலையம் வந்தபோது, ரயில் நின்றது. அப்போது சசிகலா ரயிலில் இருந்து இறங்கினார். அந்த நேரத்தில் இவர் கால் தவறி, ரயிலுக்கும், ரயில் பாதைக்கும் இடையில் வீழ்ந்து விட்டார். இவரது இடுப்புப் பகுதி ரயில் பாதைக்கும், ரயிலுக்கும் மத்தியில் சிக்கியது.
உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர், ரயில் பாதை இடிக்கப்பட்டு சசிகலா ரயில்வே பொலிஸாரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.
அதன் பின்னர், அவர் விசாகப்பட்டினம் கிம்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால், ராயகடா எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.