கொரில்லாவை மீட்கப் போராடும் ஆர்வலர்கள்!
‘உலகின் துயர்மிகு கொரில்லா’ என்று அழைக்கப்படும் தாய்லாந்தில் உள்ள புவா நொய்(Bua Noi) கொரில்லாவை குகையிலிருந்து விடுவிப்பதற்கான போராட்டத்தில் விலங்கியல் ஆர்வலர்கள் இறங்கி உள்ளனர்.
தாய்லாந்தில் உள்ள pata என்ற ஷொப்பிங் மாலுக்கு கடந்த 1990 ஆம் ஆண்டு ஒரு வயதே ஆன ஒரு குட்டி கொரில்லா குரங்கு ஜெர்மனியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
புவா நொய் (Bua Noi) என்ற பெயர் கொண்ட இந்த ஆண் கொரில்லா கொண்டு வரப்பட்டதில் இருந்து வட்ட வடிவமான இந்த ஷொப்பிங் மாலின் மேல் தளத்தில் உள்ள ஜூவில் சிறிய இரும்பிலான கூண்டுக்குள் அடைக்கப்பட்டுள்ளது .
ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட கொரில்லாக்கள், பொதுவாக குடும்பக் குழுக்களில் வாழும் சமூக விலங்குகள். லிட்டில் லோட்டஸ் என்று மொழிபெயர்க்கப்படும் புவா நொய், தாய்லாந்தில் தனியாருக்குச் சொந்தமான பாழடைந்த நகர மைய வணிக வளாகத்தின் ஏழாவது மாடியில் தனது 30-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறது .
இந்த நிலையில், தனிமையில் உள்ள கொரில்லாவை மீட்க 2015-ஆம் ஆண்டு முதல் விலங்கியல் ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். பொப் பாடகர்களும் தனிமையில் இருக்கும் கொரில்லாவை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் சர்வதேச அளவில் வெளிச்சம் பெற்றது. புவா நொய் (Bua Noi) கொரில்லா தனது இறுதி காலங்களில் சுதந்திரமாக இருக்க வேண்டும். அது பிற கொரில்லாகளுடன் அமைதியாக தனது பொழுதை கழிக்க வேண்டும் என விலங்கியல் ஆர்வலர்கள், பூங்காவின் உரிமையாளருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
“பாடா மிருகக்காட்சிசாலையில் உள்ள ஒவ்வொரு விலங்கும் ஆயுள் தண்டனையை அனுபவித்து வருகின்றன, இது கடினமான தாய்லாந்து குற்றவாளிகளுக்குக் கூட வழங்கப்படவில்லை” என்று பீட்டா ஆசியாவின் மூத்த துணைத் தலைவர் ஜேசன் பேக்கர் (Jason Baker)கூறுகிறார்.
இந்த நிலையில், இலங்கை நாணய மதிப்பில் சுமார் 30 கோடி ரூபாய் வரை கொடுத்தால்தான் கொரில்லாவை விடுவிக்க முடியுமென அதன் உரிமையாளர் கூறிவிட, தற்போது அந்த தொகையை திரட்டும் பணியில் விலங்கியல் ஆர்வலர்களும், தாய்லாந்து அரசும் இறங்கியுள்ளன.
இதுகுறித்து தாய்லாந்து அரசு தரப்பில், “புவா நொய் (Bua Noi) கொரில்லாவை விடுவிக்க கடந்த வாரம் நாங்கள் தொண்டு நிறுவனங்கள் மூலம் நிதி திரட்டினோம். இதில் பிரச்சினை என்னவென்றால் நாங்கள் திரட்டிய தொகை உரிமையாளர்களுக்கு போதுமானதாக இல்லை.
உரிமையாளர் அதிக தொகையை எதிர்பார்க்கிறார்” என்றனர்.
இதற்கிடையே, எப்படியாவது புவா நொய் (Bua Noi) கொரில்லாவை மீட்டுவிட வேண்டும் என்று அதன் ஆதரவாளர்கள் தீவிரமாக இறங்கி உள்ளனர்.