வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட இருந்த நோயாளி திடீர் மரணம்: சந்தேகம் எழுப்பும் குடும்பம்
கனடாவின் மனிடோபா மாநிலத்தில் மிக மோசமான நிலையில் சிகிச்சையில் இருந்த கொரோனா நோயாளியை வேறு மருத்துவமனைக்கு மாற்றவிருந்த நிலையில் மரணமடைந்த சம்பவம் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட இருந்த நிலையில் என்ன தவறு நிகழ்ந்தது என்பது குறித்து விளக்கமளிக்கவும் குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், இந்த இறப்பை தவிர்க்க முடியாமல் போனதன் காரணம் குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட ஹெலிகொப்டர் வசதியை நாடியுள்ள மருத்துவமனை, யார் தவறால் இறப்பு நேர்ந்தது என்பதையும் சுட்டிக்காட்ட குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், மரணமடைந்தவரின் மருத்துவ அறிக்கையை தங்களுக்கு பார்வையிட அனுமதிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மருத்துவமனை நிர்வாகத்தின் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும், இதை கொரோனா மரணம் என தள்ளிவிட முடியாது எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருந்து வந்துள்ளார் 33 வயதான Krystal Mousseau.
ஆனால் மனிடோபா சுகாதாரத்துறை கொரோனா நோயாளிகளால் தத்தளித்து வந்த நிலையில், மிக ஆபத்து கட்டத்தில் இருக்கும் நோயாளிகளை அருகாமையில் உள்ள மாநிலங்களில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அந்த வகையில் Krystal Mousseau ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் சேவையால் அனுப்பி வைக்கப்பட இருந்த நிலையில் மே 25ம் திகதி Krystal Mousseau மரணமடைந்துள்ளார்.
தற்போது இந்த விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தீவிர விசாரணைக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.