கனடாவில் வீடு கொள்வனவு செய்ய குவியும் அமெரிக்கர்கள்
அமெரிக்காவில் நிலவி வரும் அரசியல், பொருளாதார மற்றும் உலகளாவிய பாதுகாப்புப் பதற்றங்கள் காரணமாக, தஞ்சம் கோரும் நோக்கில் கனடாவில் சொத்துக்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
கனடாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான ராயல் லெபேஜ் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டின் முற்பாதியில் அமெரிக்காவில் இருந்து தங்களது இணையதளத்தைப் பார்வையிடுவோரின் எண்ணிக்கை வரலாறு காணாத வகையில் அதிரடியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் அடுத்தடுத்து அரங்கேறிய முக்கியப் பரபரப்புச் சம்பவங்களின் போது, கனடாவில் வீடுகளைத் தேடும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை மும்மடங்கு வரை அதிகரித்துள்ளது என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மினியாபோலிஸ் நகரில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரியால் 37 வயதான ரெனே குட் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஜனவரி 11 முதல் 17 வரையிலான வாரத்தில் ராயல் லெபேஜ் இணையதளத்திற்கு அமெரிக்காவில் இருந்து வந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தை விட 78 வீதம் உயர்ந்தது.
ஈரான் உடனான போர் பதற்றம் மற்றும் அமெரிக்கப் போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, ஏப்ரல் 5 முதல் 11 வரையிலான வாரத்தில் இணையதளப் போக்குவரத்து முந்தைய வாரத்தை விட 125 வீதம் அதிகரித்தது.
இது 2025 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 233 வீதம் கூடுதலாகும். "2026 இன் தொடக்க மாதங்கள் தொடர்ச்சியான அதிரடிச் செய்திகள், போர் அச்சம், பொருளாதார ஏற்ற இறக்கங்கள் மற்றும் உள்நாட்டு அரசியல் குழப்பங்களால் நிறைந்துள்ளன," என்று ராயல் லெபேஜ் நிறுவனத்தின் தலைவர் ஃபில் சோப்பர் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற கொந்தளிப்பான காலங்களில், அமெரிக்கப் பொதுவாழ்வின் பதற்றங்களில் இருந்து தங்களை விலக்கிக் கொள்ள அமெரிக்கர்கள் கனடாவிற்கு இடம்பெயர்வது பற்றிச் சிந்திப்பது வழக்கமாகிவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.