இலங்கைக்கு மகிழ்ச்சித்தகவல் ; மற்றுமொரு எரிபொருள் கப்பல்;!
இலங்கைக்கு இன்று (16) காலை மற்றுமொரு எரிபொருள் கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், அதிலுள்ள எரிபொருட்களை இன்றைய தினமே தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார் .
இன்று வருகை தந்துள்ள கப்பலில் 18,000 மெட்ரிக் தொன் டீசல், 17,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 3,000 மெட்ரிக் தொன் சுப்பர் டீசல் உள்ளடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் விநியோக நடவடிக்கை
அதேசமயம் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து கப்பல்களும் நாட்டை நோக்கி வந்துகொண்டிருப்பதுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் கோரிக்கைகளுக்கு அமைய விநியோக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதேவேளை, கிவ்.ஆர் முறைமையினூடாக எரிபொருள் விநியோகிக்கப்படுவதை இலக்கு வைத்து சில தரப்பினர் போலி கணக்குகளைப் பயன்படுத்தி பொதுமக்களின் தகவல்களைத் திரட்டி வருவதாக நிர்வாக பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இணையத்தளத்தைத் தவிர வேறு எந்தவொரு தளத்திற்கும் தகவல்களை வழங்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மோசடி செய்பவர்கள் இவ்வாறு தகவல்களைத் திரட்டி போலி கிவ்.ஆர் குறியீடுகளைத் தயாரிப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதன் காரணமாக உண்மையான உரிமையாளர்களுக்குத் தமது கிவ்.ஆர் குறியீடுகளை மீண்டும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அற்றுப்போகும் அபாயம் உள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்