நாட்டில் அமுலாகவுள்ள மற்றுமொரு சட்டம்
தங்கக் கடத்தலை தடுக்கத் தேவையான சுற்று நிருபங்கள் மிக விரைவில் வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
தங்கக் கடத்தல்காரர்களால் இலங்கைக்கு மாதாந்தம் 100,000,000 அமெரிக்க டொலர் நட்டம் ஏற்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு தங்கம் கொண்டு வரப்பட்டமையே இதற்குக் காரணம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பாரிய அந்நியச் செலாவணி நெருக்கடி
இலங்கை பாரிய அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில், இந்த தங்கக் கடத்தல்காரர்கள் ஒரு மாதத்தில் பாரியளவிலான பணத்தை மோசடி செய்து நாட்டுக்குள் தங்கத்தைக் கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு 24 கரட் தங்கக் கடத்தலை தடுக்கத் தேவையான சுற்று நிருபங்கள் மிக விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு இலங்கைக்குத் திரும்பும் இலங்கையர்களுக்கு எவ்வித அநீதியும் ஏற்படாத வகையில் சட்ட ஏற்பாடுகள் தயாரிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
நேற்றும் தங்க கடத்தல்காரர்கள் கொண்டு வந்த 40 கோடி ரூபாவுக்கு மேலான தங்கக் கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் , கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க வரலாற்றில் இது இரண்டாவது பெரிய கடத்தல் முறியடிக்கப்பட்டிருந்தது.