காசா போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் வரவேற்பு
காசாவில் போர்நிறுத்தம் மற்றும் சிறைக்கைதிகள் விடுதலைக்கான ஒப்பந்தம் எட்டப்பட்டதை ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வரவேற்றுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் எட்டப்பட்ட இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தையும், அதற்கான முயற்சியில் அமெரிக்கா, கத்தார், எகிப்து மற்றும் துருக்கி நாடுகள் மேற்கொண்ட தூதரக முயற்சிகளையும் பாராட்டுகிறேன்,” என்று குட்டெரெஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஒப்பந்தத்தின் அனைத்து விதிமுறைகளையும் பங்கேற்பாளர்கள் முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து சிறைக் கைதிகளும் மரியாதைக்குரிய முறையில் விடுவிக்கப்பட வேண்டும். நிரந்தர போர்நிறுத்தம் உறுதி செய்யப்பட வேண்டும். இப்போருக்கு இனி முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும், மனிதாபிமான உதவிகள் மற்றும் அத்தியாவசிய வணிகப் பொருட்கள் காசாவுக்குள் தடையின்றி உடனடியாக நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் இந்த ஒப்பந்தத்தின் முழுமையான அமல்பாட்டுக்கு ஆதரவு அளிக்கும். நிலையான மற்றும் நெறிமுறையுடன் கூடிய மனிதாபிமான உதவிகளை அதிகரிப்போம். மேலும், காசாவின் மீள்நிர்மாணம் மற்றும் மீட்சிக்கான நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என்று குட்டெரெஸ் தெரிவித்தார்.
மேலும், இந்த அமைதி ஒப்பந்தம் இஸ்ரேலியரும் பாலஸ்தீனரும் அமைதி மற்றும் பாதுகாப்புடன் இணைந்து வாழக்கூடிய இரு நாடு தீர்வுக்கான தொடக்கமாக அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம். பாலஸ்தீன மக்களின் தன்னாட்சியுரிமையை அங்கீகரித்து, ஆக்கிரமிப்புக்கு முடிவுகொடுக்கக் கூடிய நம்பகமான அரசியல் பாதையை உருவாக்க அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். இதற்கான பங்கு மிக உயர்ந்தது என்று ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கூறியுள்ளார்.