150 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ளும் ஆங் சான் சூகி
மியான்மர் ராணுவ அரசு பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி மீது பதினொன்றாவது ஊழல் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.
இதனால் அவர் 150 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ளும் நிலைக்கு வந்துள்ளார் என கூறப்படுகிறது.
கடந்த 2021 துவக்கத்தில் ராணுவ புரட்சி ஏற்பட்ட நிலையில் ஜனநாயக தேசிய லீக் அரசை அகற்றி விட்டு ராணுவம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது. இதனையடுத்து ஜனநாயக தேசிய லீக் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்டோர் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதை எதிர்த்து மக்கள் நடத்திய போராட்டத்தை இரும்புக் கரம் கொண்டு ராணுவம் அடக்கியது. அத்துடன் ஆங் சான் சூகி மீது அரசு ரகசியங்களை வெளியிட்டது உட்பட பல வழக்குகள் தொடரப்பட்டன.
இதில் அனுமதியின்றி அன்னிய தொலைதொடர்பு சாதனங்களை வைத்திருந்தது தொடர்பான வழக்குகளில், ஆங் சான் சூகிக்கு, 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அவர் மீது லஞ்சம் வாங்கியதாக ராணுவம் மேலும் ஒரு வழக்கு தொடுத்துள்ளது. இது, அவர் மீது தொடரப்பட்டுள்ள 11வது வழக்காகும்.
மொத்தம் அவர் மீதான குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், 150 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என்றே கூறப்படுகிறது.
இதற்கிடையே, உலக நாடுகளின் நெருக்கடிக்கு பணிந்து, மியான்மரில் 2023ல் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என, ராணுவம் அறிவித்துள்ளது.
இதில் ஆங் சான் சூகி பங்கேற்பதை தடுக்கும் நோக்கில் அவர் மீது அடுக்கடுக்கான வழக்குகளை ராணுவம் தொடுத்து வருகிறது என கூறப்படுகிறது.